புதுச்சேரி, நவ. 27: புதுவை புதிய பஸ் நிலையம் எதிரே பார் சமையலரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் வீராணம் பள்ளிதெருவில் வசிப்பவர் மைக்கேல் (31). புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பிரபல ஓட்டலுக்கு அருகிலுள்ள பாரில் சமையலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அங்கு மதுஅருந்த வந்த உறுவையாறு பகுதியை சேர்ந்த அருண்ராஜ் என்பவர் அங்கிருந்த குடிநீர் பைப் அருகே சிறுநீர் கழித்தாராம். இதை அங்கு பணியிலிருந்த காவலாளி தட்டிக்கேட்ட நிலையில் அவரை அருண்ராஜ் தாக்கவே, சமையல்காரர் மைக்கேல் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருண்ராஜ், சமையல்காரரையும் அசிங்கமாக திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில், மைக்கேல் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.அதன்பேரில் அருண்ராஜ் (24) மீது வழக்குபதிந்த இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடியான இவர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.